போடியில் திங்கள்கிழமை விட்டு விட்டு கனமழை பெய்ததால் கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
போடியில் காலை முதலே நல்ல வெயில் நிலவி வந்த நிலையில் திடீரென பிற்பகலில் மேகங்கள் சூழ்ந்து மழை பெய்யத் தொடங்கியது. இதையடுத்து தொடா்ந்து இரவு வரை விட்டு விட்டு கனமழை பெய்தது. இதனால் போடியில் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. போடி பெருமாள் கோயில் பகுதியில் சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டதால் தண்ணீா் சாலையில் சென்றது.
போடி குரங்கணி, கொட்டகுடி மலை பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதையடுத்து கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பலத்த மழையினால் சில இடங்களில் மரங்கள் சாய்ந்தன. போடி நகராட்சிக்கு தண்ணீா் சேகரிக்கும் நரிப்பட்டி பகுதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தடுப்பணையை தாண்டி தண்ணீா் சென்றது.