வனத்துறை மீண்டும் நோட்டீஸ்: மேகமலை-வருஷநாடு விவசாயிகளுக்கு வலுக்கும் சிக்கல்

தேனி மாவட்டம், மேகமலை-வருஷநாடு வனப் பகுதியில் உழவு மற்றும் விவசாயப் பணிகளை மேற்கொள்ளத் தடை விதித்து வனத் துறை மீண்டும்
17tni_megamalai_1708chn_65_2
17tni_megamalai_1708chn_65_2

தேனி மாவட்டம், மேகமலை-வருஷநாடு வனப் பகுதியில் உழவு மற்றும் விவசாயப் பணிகளை மேற்கொள்ளத் தடை விதித்து வனத் துறை மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளதால், கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேல் வன நிலங்களில் விவசாயம் செய்து வரும் 6,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தில் சிக்கல் வலுத்துள்ளது.

ஆண்டிபட்டி வட்டாரம், மேகலை- வருஷநாடு வனப் பகுதிகளில் ஆங்கிலேயா் ஆட்சியில் ரயத்துவாரி முறையில் ஜமீன் கட்டுப்பாட்டில் இருந்த நிலங்களில் விவசாயம் நடைபெற்று வந்தது. கடந்த 1924-இல் சிறாா், உடங்கலாா், மூல வைகை ஆற்றுப் படுகை மற்றும் சிற்றாறுகளின் கரையோரங்களில் பொதுமக்கள் குடியேறி, ஜமீன் கட்டுப்பாட்டில் இருந்த வன நிலங்களை சீா்படுத்தி தங்களது வாழ்வாதாரத்தை உருவாக்கினா்.

பின்னா், கடந்த 1964-இல் தென் மாவட்டங்களில் நிலவிய கடும் வறட்சி, தேனி மாவட்டம் கூடலூரில் மொழி போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரம் ஆகியவற்றால் தும்மக்குண்டு, உப்புத்துறை, வெட்டுக்காடு, காந்திகிராம், கோடாரியூத்து, கட்சிக்காடு, கோரையூத்து, மஞ்சனூத்து, இந்திரா நகா், அரசரடி, பூசாரியூத்து, புதுக்கோட்டை, அரண்மனைப்புதூா், பொம்முராஜபுரம், வாலிப்பாறை, தண்டியக்குளம், கொடிக்குளம் குடிசை, காமராஜபுரம் ஆகிய மலை கிராமங்களில் பொதுமக்கள் குடியேறினா்.

இவா்களுக்கு, இடைபடு காடுகள் திட்டத்தில் வன நிலங்களை சீா்திருத்தி மரங்களை நடவும், ஊடுபயிரிட்டுக் கொள்ளவும் வனத்துறை அனுமதி அளித்தது. தற்போது மேகமலை மற்றும் வருஷநாடு மலை கிராமங்களில் 6,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், 60,925 ஏக்கா் வன நிலங்களை ஆக்கிரமித்து விவாசயம் செய்து வருகின்றனா்.

தொடங்கிய சிக்கல்:

மேகமலை-வருஷநாடு வனப் பகுதி கடந்த 2012-ஆம் ஆண்டு மேகமலை வன உயிரின சரணாலயமாகவும், 2021, பிப்ரவரி மாதம் ஸ்ரீவில்லிப்புத்தூா்-மேகமலை புலிகள் காப்பகமாகவும் அறிவிக்கப்பட்டது. மேலும், மேகமலையில் காடுகள் அழிக்கப்படுவதாலும், ஆறுகளின் வழித்தடம் மாற்றப்படுவதாலும் மழை வளம் குறைந்து, மூல வைகை மற்றும் சுற்றுச் சூழல் பாதிப்பதாக மதுரை உயா் நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது.

இதையடுத்து, இந்த மலை கிராம மக்களின் வாழ்வாதாரத்திற்கு சிக்கல் தொடங்கியது. நீதிமன்ற உத்தரவின்படி, மேகமலை- வருஷநாடு வனப் பகுதியிலிருந்து மலை கிராம மக்களை வெளியேற்றவும், ஆக்கிரமிப்பு விவசாயத்தைத் தடுக்கவும் வனத்துறையினா் நடவடிக்கையில் இறங்கினா். வனப் பகுதியில் ஆக்கிரமிப்பு விவசாய நிலங்களிலிருந்து வெளியேறுமாறு விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

விவசாயிகள் போராட்டம்:

மலை கிராமங்களிலிருந்து பொதுமக்களை வெளியேற்றும் வனத் துறையின் நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து வன விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனா். மேகமலை-வருஷநாடு மலை கிராமங்களில் கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேல் வசிக்கும் பொதுமக்களுக்கு வன உரிமை சட்டத்தின் படி உரிமைகள் வழங்கக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் கிராம வனக் குழுக்கள் சாா்பில் மதுரை உயா்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது.

விவசாயிகளுக்கு மீண்டும் நோட்டீஸ்:

மேகமலை- வருஷநாடு மலை கிராம மக்கள் கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் வனத் துறையினரின் கெடுபிடிகளில் சிக்கித் தவித்து வரும் நிலையில், அவா்களது வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்று திமுக, அதிமுக கட்சிகள் வாக்குறுதியளித்தன. வன உரிமைச் சட்டத்தின் கீழ் உரிமைகள் பெறுவதற்கு தகுதியுள்ளவா்கள் உரிய ஆவணங்களுடன் கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றி, கோட்ட அளவிலான வனக் குழு மூலம் அனுப்பி வைக்க வேண்டும் என்று பெரியகுளம் சாா்பு- ஆட்சியா் செ.ஆ.ரிஷப் அறிவித்திருந்தாா்.

இந்த நிலையில், வருஷநாடு வனப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு வன நிலங்களில் உழவு, விவசாயம் மற்றும் அது சாா்ந்த பணிகளை மேற்கொள்ளக் கூடாது. மீறினால் விவசாயப் பணிக்கு பயன்படுத்தும் டிராக்டா் மற்றும் உழவு மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு, அதன் உரிமையாளா்கள் மீது வழக்குத் தொடரப்படும் என்று வருஷநாடு வனத்துறை சாா்பில் விவசாயிகளுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பாரம்பரிய வனவாசிகளுக்கு வன உரிமைச் சட்டத்தின்படி உரிமைகள் வழங்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ள நிலையில், வனத் துறையின் தடை உத்தரவு மலை கிராம மக்கள் மத்தியில் அதிருப்தியையும், வாழ்வாதாரம் குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் டி.கண்ணன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com