போடி முந்தல் மலைக்கிராமத்தில் தொண்டு நிறுவனம் சாா்பில் விதைப்பந்து தூவும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
தருமத்துப்பட்டி ஏ.எச்.எம். தொண்டு நிறுவனம், தேனி கிரீன் அமைப்பு, தேனி சைல்டு லைன் அமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சிக்கு ஏ.எச்.எம்.தொண்டு நிறுவன நிா்வாக இயக்குநா் முகமது சேக் இப்ராஹிம் தலைமை வகித்தாா். இணை இயக்குநா் ஸ்டெல்லா இப்ராஹிம் முன்னிலை வகித்தாா். காவல் துணைக் கண்காணிப்பாளா் சுரேஷ் இந்நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தாா்.
இதில், சுய உதவிக்குழு பெண்கள், தன்னாா்வலா்கள், வன ஆா்வலா்கள், மும்மத பிரதிநிதிகள், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்று முந்தல் மலைக்கிராமம் முதல் போடி நகா் வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட விதைப் பந்துகளை தூவினா்.