போடி அருகே ஞாயிரன்று நள்ளிரவு இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேனி மாவட்டம், போடி அருகே கீழச்சொக்கநாதபுரம் நேருஜி காலனியைச் சேர்ந்தவர் ஒண்டிவீரன் மகன் ரவிக்குமார் (26). டிப்ளமோ படித்துவிட்டு பெங்களூருவில் வேலை செய்து வந்தார். கரோனா கராணமாக சொந்த ஊரில் தங்கியிருந்தார். ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை.
நள்ளிரவு வரை வராததால் இவரது தந்தை தேடிச் சென்றுள்ளார். அப்போது கீழச்சொக்கநாதபுரத்தையடுத்த சுந்தரராஜபுரத்திலிருந்து சில்லமரத்துப்பட்டி செல்லும் சாலையில் புளியமரத்தடி என்ற இடத்தில் அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் ரவிக்குமார் இறந்து கிடந்துள்ளார்.
பின் தலை, வலதுபுற தோள்பட்டையில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. மர்ம நபர்கள் மிளகாய் பொடி தூவி அரிவாளால் வெட்டியுள்ளனர். இடது ஆள்காட்டி விரலும் துண்டாக கிடந்துள்ளது. இதுகுறித்து ஒண்டிவீரன் கொடுத்த புகாரின் பேரில் போடி தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகள் யார், கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
போடி டி.எஸ்.பி. ஜி.பார்த்திபன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.