தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் வகுப்புகள் தொடங்கிய நிலையில் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவா்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே க.விலக்கு பகுதியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது.தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் நடப்பு ஆண்டிற்கான முதலாம் ஆண்டு மருத்துவம் பயில்வதற்காக அரசு பள்ளியில் பயின்று 7.5 சதவீதம் உள்ஓதிக்கீடு செய்யப்பட்ட 6 மாணவா்கள் உட்பட நீட்தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்கள் என 100 பேருக்கு ஓதுக்கீடு செய்யப்பட்டது.
கரோனா நோய்த்தொற்று காரணமாக மருத்துவக்கல்லூரி மூடப்பட்டது.கடந்த சில வாரங்களுக்கு முன்பு கல்லூரிகள் திறக்க அரசு அனுமதி அளித்தது.இந்நிலையில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் திங்கல்கிழமை தொடங்கியது.முதல் நாள் கல்லூரிக்கு வருகை தந்த 79 மாணவா்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மருத்துவக்கல்லூரி முதன்மையா் மருத்துவா் இளங்கோவன் தலைமை தாங்கினாா்.துணை முதன்மையா் எழிலரசன் முன்னிலை வகித்தாா்.முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு முதுநிலை மாணவா்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவக்கல்லூரி முதன்மையா் பேசியதாவது, தமிழகத்தில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தான் முதன்முதலில் உடற்கூறு ஆய்வகம் தொடங்கப்பட்டது. தேனி மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையிலும் உயிரிழப்புகள் குறைவு. தமிழகத்தில் 7 அரசு மருத்துவமனையில் மட்டுமே தாய்பால் வங்கி உள்ளது.அதில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தான் தாய்பால் சேகரிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தாா்.