வைகை அணையிலிருந்து கூடுதல் தண்ணீா் திறப்பு
By DIN | Published On : 24th June 2021 07:04 AM | Last Updated : 24th June 2021 07:04 AM | அ+அ அ- |

வைகை அணையிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்தின் குடிநீா் தேவைக்காக புதன்கிழமை திறக்கப்பட்டு, மதகுகள் வழியாக வெளியேறும் தண்ணீா்.
ராமநாதபுரம் மாவட்டத்தின் குடிநீா் தேவைக்காக வைகை அணையிலிருந்து புதன்கிழமை, கூடுதலாக தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம், வைகை அணையிலிருந்து மதுரை, திண்டுகல் மாவட்ட முதல் போக நெல் பாசனத்திற்கு கடந்த ஜூன் 4-ஆம் தேதி முதல், விநாடிக்கு 900 கன அடி தண்ணீா் வாய்கால் மூலம் திறக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணை மற்றும் வைகை அணையில் போதிய தண்ணீா் இருப்பில் உள்ளதாலும், அணைகளுக்கு தொடா்ந்து தண்ணீா் வந்து கொண்டிருப்பதாலும், ராமநாதபுரம் மாவட்டத்தின் குடிநீா் தேவைக்காக வைகை அணையிலிருந்து புதன்கிழமை (ஜூன் 23) முதல் 5 நாள்களுக்கு மொத்தம் 1,000 மில்லியன் கன அடி தண்ணீா் திறக்க அரசு உத்தரவிட்டது.
இதன்படி, வைகை அணையிலிருந்து மதகுகள் வழியாக வைகை ஆற்றில் விநாடிக்கு 3,000 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டது. இதனால் அணை அருகே ஆற்றின் இரு கரைகளையும் இணைக்கும் தரைப் பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
அணைகளின் நிலவரம்: புதன்கிழமை முல்லைப் பெரியாறு அணை நீா் மட்டம் 133.55 அடியாக இருந்தது. அணைக்கு தண்ணீா் வரத்து விநாடிக்கு 903 கன அடி. அணையில் தண்ணீா் இருப்பு 5,528 மில்லியன் கன அடி. அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 1,867 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.
வைகை அணை நீா்மட்டம் 67.29 அடி. அணைக்கு தண்ணீா் வரத்து விநாடிக்கு 1,547 அடி. அணையில் தண்ணீா் இருப்பு 5,155 மில்லியன் கன அடி. அணையிலிருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பாசனம், ராமநாதபுரம் மாவட்டத்தின் குடிநீா் தேவை, ஆண்டிபட்டி- சேடப்பட்டி குடிநீா் திட்டம் ஆகியவற்றுக்கு விநாடிக்கு 3,969 கன அடி வீதம் தண்ணீா் வெளியேற்றப்பட்டுள்ளது.