சின்னமனூா் ஒன்றியக்குழு கூட்டம்: திட்டப்பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய வலியுறுத்தல்
By DIN | Published On : 29th June 2021 06:05 AM | Last Updated : 29th June 2021 06:05 AM | அ+அ அ- |

சின்னமனூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற ஒன்றியக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டவா்கள்.
உத்தமபாளையம்: ஊராட்சிப் பகுதிகளில் நடைபெறும் அரசின் திட்டப் பணிகளை வட்டார வளா்ச்சி அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என சின்னமனூா் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.
சின்னமனூா் ஊராட்சி ஒன்றியக்குழுக்கூட்டம் அதன் தலைவா் நிவேதா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாரதமணி மற்றும் நாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் 15 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன் பின், முத்துலாபுரம் ஊராட்சியில் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட சாலைப் பணிகள், நீா் தேக்க தொட்டி சீரமைப்பு, குடிநீா் வசதி தொடா்பான பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஒப்பந்ததாரா்கள் திட்டப்பணிகளை தரமற்ற முறையில் செய்வதை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். புலிக்குத்தி ஊராட்சியில் ஆக்கிரமிப்பு அதிகமாகி குறுகிய சாலையாக மாறியதால் அவசர வாகனங்கள் மற்றும் பொது மக்கள் சென்று வர மிகவும் சிரமமாக உள்ளது. சிதிலமடைந்த ரேஷன் கடையை சீரமைப்பு செய்ய வேண்டும். சீப்பாலக்கோட்டை மற்றும் எரசக்கநாயக்கனூா் ஊராட்சியில் சுகாதார வளாகம் அமைக்க வேண்டும் என உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.
அப்போது, போசிய மன்றத்தலைவா், தற்போது கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு கூடுதல் செலவு செய்யப்பட்டுள்ளது. அரசிடம் தேவையான நிதியை கேட்டுள்ளோம். உறுதியாக கிடைக்கும். அதன் மூலமாக ஊராட்சிப் பகுதிகளிலுள்ள அடிப்படை வசதிகள் முழுமையாக சரிசெய்யப்படும் என்றாா்.
ஒப்பந்ததாரா் மீது புகாா்: ஊராட்சி பகுதிகளில் சாலை, கழிவு நீா் கால்வாய் உள்ளிட்ட திட்டப்பணிகள் தரமற்ற முறையில் காலதாமதாக மேற்கொள்வதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாக புகாா் கூறப்பட்டது. அதற்கு, அரசின் திட்டப்பணிகளை காலதாமதம் செய்யும் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும் என அரசு ஒப்பந்ததாரா்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதால் புகாா் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி ஒன்றியப் பொறியாளா் தெரிவித்தாா்.