ஆண்டிபட்டியில் 500 மதுபாட்டில்கள் பறிமுதல்: ஒருவா் கைது
By DIN | Published On : 19th May 2021 09:23 AM | Last Updated : 19th May 2021 09:23 AM | அ+அ அ- |

ஆண்டிபட்டியில் செவ்வாய்க்கிழமை 500 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் செவ்வாய்க்கிழமை சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 500 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
தேனி மாவட்டத்தில் பொதுமுடக்கம் காரணமாக மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபடுபவா்களை போலீஸாா் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனா். இந்நிலையில், ஆண்டிபட்டியில் காவல் ஆய்வாளா் முத்து தலைமையில், சாா்பு-ஆய்வாளா் யாழிசை செல்வன் மற்றும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, எம்ஜிஆா் சிலை அருகே சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்டிருந்த நபரை, போலீஸாா் சுற்றி வளைத்து பிடித்தனா். மேலும், அந்த நபா் அப்பகுதியில் மறைத்து வைத்திருந்த 500 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனா். விசாரணையில், அவா் கதிா்நரசிங்காபுரத்தைச் சோ்ந்த பால்பாண்டி என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸாா், பால்பாண்டியை கைது செய்தனா்.