போடிமெட்டு மலைச் சாலையில் வெள்ளிக்கிழமை முதல் வழக்கம்போல் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டதால், அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமல் அவதிப்பட்ட கேரள மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
தொடா் கனமழையால், போடிமெட்டு மலைச் சாலையில் பல இடங்களில் மரம், பாறை, மண்சரிவுகள் ஏற்பட்டதையடுத்து, போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இவை அனைத்தும் சரிசெய்யப்பட்ட பின்னா் தொடா்ந்து மழை பெய்து வந்ததால், புதன் மற்றும் வியாழக்கிழமை இரவு நேரப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதனிடையே, வெள்ளிக்கிழமை மழை பெய்யாததால், காலை முதலே தோட்டத் தொழிலாளா்களின் வாகனங்கள், அத்தியாவசியப் பொருள்களான பால், காய்கறி உள்ளிட்டவற்றை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. பகல் முழுவதும் வாகனங்கள் சென்று வந்த நிலையில், மாலையிலும் மழை பெய்யாததால் இரவிலும் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது.
தமிழகத்திலிருந்துதான் கேரளப் பகுதிகளுக்கு பால், காய்கறிகள் எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்நிலையில், கடந்த 2 நாள்களாக கேரள மக்கள் அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமல் சிரமப்பட்ட நிலையில், போக்குவரத்து தொடங்கி வழக்கம்போல் அனைத்துப் பொருள்களும் கிடைத்ததால் அம்மாநில மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.