தேனி மாவட்டம் கூடலூர் குமுளி நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பள்ளங்களை பராமரிப்பு செய்ய வேண்டிய நெடுஞ்சாலைத் துறைக்கு பதிலாக காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை பழுது பார்த்தனர்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் கூடலூர் குமுளி நெடுஞ்சாலை மிகவும் சேதமடைந்தது. சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டும், கற்கள் பெயர்ந்தும், இரண்டு சக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்கி காயமடைந்தும் உயிர் பலியாகினர்.
நெடுஞ்சாலை பராமரிப்பு செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்தூம் நெடுஞ்சாலைத்துறையினர் சாலைகளில் உள்ள பள்ளங்களை சரி செய்யாமல் கிடப்பில் போட்டு விட்டனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை கூடலூர் குமுளி நெடுஞ்சாலையில் பணியில் இருந்த சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் காளிமுத்து, முகுந்தன் ஆகியோர் மேடு பள்ளங்களில் சரளை மண் போன்றவைகளை நிரப்பி சாலையை சரி செய்தனர்.
இதனால் அப்பகுதி பொதுமக்கள் போலீசாரை பாராட்டினர்.