கடவுளாக வழிபடும் சிற்றரசர் சிலை உடைப்பு; போடியில் பதற்றம்
ஜமீன்தார்கள் ஆட்சியின் போது சிற்றரசராக இருந்து இப்பகுதியை ஆண்டவர் ராசி நாயக்கர். இவர் மதுரை மீனாட்சியம்மனுக்கு தனது கண்ணை கொடுத்ததாகவும் அதனால் கண் கொடுத்த ராசி நாயக்கர் என்றும் அழைக்கப்பட்டு வந்தார்.
இவருக்கு போடி போஜன் பார்க் பகுதியில் சிலை அமைத்து சில நூற்றாண்டுகளாக நாயக்கர் சமுதாயத்தினர் வழிபட்டு வருகின்றனர். இந்த சிலையை போடி வ.உ.சி.நகரை சேர்ந்த கனகு மகன் கார்த்திக் (36) என்ற ராணுவ வீரர் இரவில் உடைத்து சேதப்படுத்தி உள்ளார்.
இதனை இங்கு ரோந்து பணியில் இருந்த காவலரே வீடியோ பதிவும் செய்துள்ளார். சிலை உடைப்பு சம்பவம் குறித்து புகார் செய்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ஞாயிரன்று போடி, சூலப்புரம், கரட்டுப்பட்டி உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த நாயக்கர் சமுதாயத்தினர் 200-க்கும் மேற்பட்டோர் போடி தேனி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஒரு மணி நேரத்திற்கும் மேல் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு வந்த போடி டி.எஸ்.பி. பொறுப்பு) அண்ணாதுரை, போடி நகர் காவல் ஆய்வாளர் ராமலட்சுமி ஆகியோர் மறியல் ஈடுபட்டவர்களை சமாதானபடுத்தினர். இதனையடுத்து மறியல் கைவிடப்பட்டது.