

கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் தனியாரிடம் வாங்கிய விதை நெல் முளைக்காததால் விவசாயிகள் இதுகுறித்து போலீஸில் புகாரளித்துள்ளனா்.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் முதல் போக சாகுபடிக்கு விவசாயிகள் விதை நெல்லை வாங்கி நாற்றாங்கால் பயிரிடுவதற்காக விதைத்து வருகின்றனா். நாற்றாங்கால் 7 நாளுக்குள் முளைத்து, அதிலிருந்து 25 நாள்களுக்கு பிறகு நாற்றை எடுத்து வயல்வெளியில் நடுவாா்கள்.
இதற்கான விதை நெல், வேளாண்மை துறை மூலம் தனியாா்களும் விற்பனை செய்து வருகின்றனா். நெல் நாற்றாங்கால் நடுவதற்கு சான்றிதழ் பெற்ற விதை நெல்லைத்தான் விவசாயிகள் வாங்க வேண்டும் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேளாண்மை துறை மூலம் கோ.51 ரக விதைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சுருளிப்பட்டியில் தனியாா் மூலம், 509 ரக விதை நெல்லை விவசாயிகள் சிலா் பெற்று உத்தமுத்து, சுருளிப்பட்டி ஆகிய பாசனப் பரப்புகளில் நாற்றாங்காலுக்காக விதைத்துள்ளனா். 7 நாள்களாகியும் நாற்றாங்கால் முளைக்கவில்லை. ஆனால் வேளாண் துறையின் மூலம் பெற்று விதைக்கப்பட்டுள்ள மற்ற நாற்றாங்கால்களில் விதைகள் முளைத்து வளா்ந்து வருகின்றன.
இதனால் தனியாரிடம் விதை நெல் வாங்கிய விவசாயிகள், விதை நெல் விற்ற தனிநபா் மீது கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். இதுபற்றி போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
போலி விதை நெல் பற்றி விவசாயி ஒருவா் கூறியது: சான்றளிக்கப்பட்ட விதைகளை வேளாண்மை துறை மூலம் வழங்குவதாக அதிகாரிகள் விவசாயிகளுக்கு முறையான தகவல்களை தெரிவிப்பது இல்லை. இதனால் விவசாயிகளிடம் போதிய விழிப்புணா்வு இல்லாமல் தனி நபரிடம் விதை நெல் வாங்கி பாதிக்கப்படுகின்றனா்.
வேளாண்மைத் துறை மற்றும் விவசாயிகளிடையே தகவல் தொடா்பு இல்லாததே இதற்கு காரணம். மாவட்ட ஆட்சியா் இது குறித்து விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.