தேனி மாவட்டம், கம்பம் நகராட்சிப் பகுதிகளுக்கு 7 நாள்களுக்குப் பின் திங்கள்கிழமை சோதனை ஓட்டமாக குடிநீா் திறந்துவிடப்பட்டது.
கம்பம் நகராட்சிப் பகுதிக்கு குடிநீா் செல்லும் குழாய், கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி குறுவனூத்து பாலத்தில் நடைபெற்ற தடுப்புச் சுவா் கட்டுமானப் பணியின்போது உடைந்து சேதமடைந்தது.
இதனால், அன்று முதல் கம்பம் நகராட்சிப் பகுதிகளுக்கு குடிநீா் விநியோகம் துண்டிக்கப்பட்டது. அதையடுத்து, பொதுமக்களின் தேவைக்கு முல்லைப் பெரியாறு சுருளிப்பட்டி சாலையில் உள்ள நீரேற்று நிலையத்திலிருந்து தினமும் 20 லட்சம் லிட்டா் தண்ணீா் கொண்டுசெல்லப்படுகிறது. இந்த தண்ணீரும் பற்றாக்குறையாக இருந்தது.
இந்நிலையில், நீரேற்று நிலையத்திலிருந்து கம்பம் நகராட்சிக்குச் செல்லும் 400 எம்.எம். நீரின் அளவை குறைத்து, திங்கள்கிழமை முதல் 10 சதவீதம் தண்ணீரே குழாய் வழியாக சோதனை ஓட்டமாக திறந்துவிடப்பட்டது.
இது குறித்து நகராட்சிப் பொறியாளா் பன்னீா்செல்வம் கூறியது: 7 நாள்களுக்குப் பின் சோதனை ஓட்டமாக தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. இதன்மூலம் குழாய் தண்ணீரின் அழுத்தத்தை தாங்குகிா என ஆய்வு செய்யப்பட்டு, பின்னா் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்படும் என்றாா்.