கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் கம்பம்மெட்டு காலனியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் உள்ள குடிநீரில், மர்ம நபர்கள் அசுத்தம் செய்ததால், வியாழக்கிழமை காலை மக்கள் சாலை மறியல் செய்தனர்.
தேனி மாவட்டம் கம்பம் கம்பம்மெட்டு காலனி 9 ஆவது வார்டில் மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. சுமார் 1.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த தொட்டியின் மீது மேல், புதன்கிழமை இரவு நேரத்தில் சில மர்ம நபர்கள் சிறுநீர் கழித்தும், மதுபாட்டில்களை உடைந்தும் ஆபாசமாக பேசியுள்ளார்கள். இதை அங்குள்ளவர்கள் கண்டித்ததால், அவர்களுக்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதன் எதிரொலியாக வியாழக்கிழமை காலை கம்பம், கம்பம் மெட்டு சாலையில் மறியல் செய்தனர். அங்கு வந்த நகர்மன்றத் தலைவர் வனிதா நெப்போலியன், கவுன்சிலர் அமுதா, மற்றும் வடக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் செந்தில்ராஜ் ஆகியோர் மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் மேல்நிலை குடிநீர் தொட்டியை சுற்றி சுத்தம் செய்வது, சுற்றுசுவர் எழுப்பி பாதுகாப்பது, இரண்டு இடங்களில் கண்காணிப்பு கேமிரா அமைத்து, கண்காணிப்பு செய்யப்படும் என்று நகர்பன்ற தலைவர் வனிதா நெப்போலியன் உறுதி கூறினார். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.