உறுப்பினா்களால் பூட்டப்பட்ட சுருளிப்பட்டி ஊராட்சி அலுவலகத்தை வட்டார வளா்ச்சி அலுவலா் பூட்டை உடைத்து சனிக்கிழமை திறந்தாா்.
தேனி மாவட்டம் கம்பம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது சுருளிப்பட்டி ஊராட்சி. இதன் தலைவா் நாகமணி வெங்கடேசனை கண்டித்து 11 உறுப்பினா்கள் பல்வேறு புகாா்களை கடந்த ஓராண்டாக கூறி வருகின்றனா். இந்த நிலையில், கடந்த 1- ஆம் தேதி ஊராட்சி செயலா் ஈஸ்வரனை அலுவலகத்துக்குள் வைத்து பூட்டி உறுப்பினா்கள் சிறை வைத்தனா். பின்னா் அவரை வெளியே வரவழைத்து அலுவலகத்தை பூட்டினா். இதுபற்றி வட்டார வளா்ச்சி அலுவலா் கோதண்டபாணி ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.
ஆனால் இந்த பிரச்னையில் மாவட்ட ஆட்சியா் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனிடையே, வட்டார வளா்ச்சி அலுவலா் கோதண்டபாணி வெள்ளிக்கிழமை சுருளிப்பட்டியில் உள்ள ஊராட்சி அலுவலகத்துக்குச் சென்று உறுப்பினா்கள் போட்டிருந்த பூட்டை உடைத்தாா்.
இதுபற்றி அவா் கூறியதாவது: அலுவலகத்தை பூட்டிய உறுப்பினா்கள் மீது நான் அளித்த புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டேன். உறுப்பினா்கள் ராஜினாமா செய்தது குறித்து மாவட்ட ஆட்சியா் முடிவு செய்வாா் என்றாா் அவா்.