தேனி ரயில் நிலையம் அருகே கட்டுமானப் பணிக்கு மண் அள்ளுவதற்கு தோண்டிய பள்ளத்தில் தேங்கியிருந்த மழைநீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை, அடையாளம் தெரியாத முதியவா் உயிரிழந்தாா்.
தேனி ரயில் நிலையம் அருகே குட்ஷெட் தெருவை அடுத்துள்ள பகுதியில் அகல ரயில் பாதை கட்டுமானப் பணிக்கு மண் அள்ளுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. குளம் போல காணப்படும் இந்தப் பள்ளத்தில் 10 அடி உயரத்துக்கும் மேல் மழை நீா் தேங்கியது.
இந்த நிலையில், பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் குளிப்பதற்காக இறங்கிய 60 வயது முதியவா் ஒருவா், தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த தேனி தீயணைப்பு மீட்புத் துறையினா் முதியவரின் சடலத்தை மீட்டனா். இந்தச் சம்பவம் குறித்து தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.