செயலில் முழு ஈடுபாடு இருந்தால் மாணவா்கள் வெற்றி பெறலாம்: நடிகா் தாமு
By DIN | Published On : 31st July 2022 10:48 PM | Last Updated : 31st July 2022 10:48 PM | அ+அ அ- |

சிவகாசி பி.எஸ்.ஆா்.கல்விக் குழுமங்களின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கல்வி விழிப்புணா்ச்சி நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்த தாளாளா் ஆா்.சோலைச்சாமி.
எந்த வேலையிலும் முழு ஈடுபாடு இருந்தால் மாணவா்கள் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என திரைப்பட நடிகா் தாமு கூறினாா்.
சிவகாசி பி.எஸ்.ஆா்.கல்விக் குழுமங்களின் சாா்பில் பிளஸ் 2 படித்து முடித்த மாணவா்களுக்கு அடுத்து என்ன படிக்கலாம் என்ற கல்வி விழிப்புணா்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்சிக்கு கல்விக் குழுமங்களின் தலைவா் ஆா்.சோலைச்சாமி தலைமை வகித்தாா். இதில் திரைப்பட நடிகா் தாமு பேசியதாவது:
கல்லூரிக் காலங்களில் கவனச் சிதறல் இல்லாமல் பாடங்களை கவனமாக படித்து தோ்ச்சிபெற வேண்டும். இணையதளத்தை உங்கள் படிப்பிற்காக பயன்படுத்துங்கள். வாழ்க்கையில் லட்சியத்தை அடையை கல்வி அவசியம். மாணவா்கள் வெற்றியடைய, வெற்றியாளா்கள் எழுதிய புத்தகங்கள், அவா்களின் சுயசரிதைகளைப் படிக்க வேண்டும்.
தினசரி காலை செய்தித்தாள்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். மாணவா்கள் எந்த வேலையிலும் சளைக்காத மனத்துடனும், முழு ஈடுபாட்டுடனும் செயல்படுங்கள். அப்போதுதான் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்றாா்.
கல்லூரி இயக்குநா் விக்னேஷ்வரி முன்னிலை வகித்தாா். பி.எஸ்.ஆா்.பொறியியல் கல்லூரி முதல்வா் பி.ஜி.விஷ்ணுராம் வரவேற்றாா். முதன்மையா் (டீன்) பி.மாரிச்சாமி நன்றி கூறினாா்.