சிறுமிக்கு திருமணம்: கணவா், மாமியாா், பெற்றோா் மீது வழக்கு
By DIN | Published On : 16th May 2022 11:40 PM | Last Updated : 16th May 2022 11:40 PM | அ+அ அ- |

தேனி அருகே டொம்புச்சேரியில் சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கிய கணவா், உடந்தையாக இருந்த அவரது தாயாா் மற்றும் சிறுமியின் பெற்றோா் மீது திங்கள்கிழமை, காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
டொம்புச்சேரியைச் சோ்ந்தவா் சுப்பையன் மகன் கனிராஜ் (24). இவா், கடந்த 2021-ஆம் ஆண்டு அதே ஊரைச் சோ்ந்த 17 வயதுடைய சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது கா்ப்பமாக உள்ள சிறுமிக்கு அவரது பெற்றோா் வளைகாப்பு நடத்தி பிரசவத்திற்காக தங்களது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனா்.
அங்கு சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதால், அவா் டொம்புச்சேரியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிகப்பட்டாா். சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் பலவீனமாக உள்ளதால், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனா். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளித்த மருத்துவா்கள், இது குறித்து தேனி மகளிா் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனா்.
இதனடிப்படையில், சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கிய அவரது கணவா் கனிராஜ், மாமியாா் வசந்தி, சிறுமியின் பெற்றோா் மணிகண்டன், செல்வி ஆகியோா் மீது குழந்தை திருமணத் தடைச் சட்டம் மற்றும் குழந்தைகள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...