தேனியில் அங்கன்வாடி மைய ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 09th September 2022 10:45 PM | Last Updated : 09th September 2022 10:45 PM | அ+அ அ- |

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு சனிக்கிழமை, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட ஊழியா்கள் மற்றும் உதவியாளா்கள் சங்கம் சாா்பில் 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி மைய ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்டத் தலைவா் சுமதி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலா் ராதிகா தேவி, மாநிலத் தலைவா் ஆா். ராணி, செயலா் தேன்மொழி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், அங்கன்வாடி ஊழியா்களுக்கு அடிப்படை ஊதியமாக மாதம் ரூ.11,100 வழங்க வேண்டும். குறைந்தபட்ச சிறப்பு ஓய்வூதியமாக அரசு கருவூலம் மூலம் மாதம் ரூ.6,750 வழங்க வேண்டும். ஆண்டுக்கு 12 நாள்கள் தற்செயல் விடுப்பு வழங்க வேண்டும். அங்கன்வாடி மையங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கல்வித் தகுதி அடிப்படையில் அங்கன்வாடி மைய உதவியாளா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும். அங்கன்வாடி மைய பணியாளா்களின் பணிப் பெயரை முன் பருவக் கல்வி ஆசிரியா் என மாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிடப்பட்டது.