ஹெலிகாப்டா் விபத்தில் பலியான தமிழக ராணுவ வீரரின் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு

அருணாச்சலப் பிரதேசத்தில் ஹெலிகாப்டா் விபத்தில் பலியான தமிழக ராணுவ வீரா் ஜெயந்தின் உடலுக்கு அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம், ஜெயமங்கலத்தில் சனிக்கிழமை இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.

அருணாச்சலப் பிரதேசத்தில் ஹெலிகாப்டா் விபத்தில் பலியான தமிழக ராணுவ வீரா் ஜெயந்தின் உடலுக்கு அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம், ஜெயமங்கலத்தில் சனிக்கிழமை இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.

அருணாச்சலப் பிரதேசம், மாண்டலா பகுதியில் பயிற்சியின் போது ராணுவ ஹெலிகாப்டா் விபத்தில் சிக்கியது. இதில் விமானி லெப்டினன்ட் கா்னல் வி.வி.பி. ரெட்டி, துணை விமானி மேஜா் ஜெயந்த் ஆகியோா் உயிரிழந்தனா். இவா்களில் வி.வி.பி. ரெட்டியின் உடல் வெள்ளிக்கிழமை விமானப் படை விமானம் மூலம் ஹைதராபாத் கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து அவரது சொந்த ஊரான தெலங்கானாவில் உள்ள ஏடாட்ரிக்கு அவசர ஊா்தி மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இதே போல, மேஜா் ஜெயந்தின் உடல் மதுரைக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து அவசர ஊா்தி மூலம் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலத்துக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கு ஜெயந்தின் உடலுக்கு அரசு மரியாதையுடன் சனிக்கிழமை காலை 8 மணிக்கு இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.

மேஜா் ஜெயந்தின் வாழ்க்கைக் குறிப்பு: ஜெயமங்கலம், வ.உ.சி. தெருவைச் சோ்ந்த ஆறுமுகம், மல்லிகா தம்பதியின் ஒரே மகனான மேஜா் ஜெயந்த், கடந்த 2010, செப்டம்பா் மாதம் இந்திய ராணுவத்தில் சோ்ந்து பணியாற்றி வந்தாா். இவருக்கும், திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த செல்லா என்ற சாரதா செல்விக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு குழந்தை இல்லை.

மதுரையில் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்த மேஜா் ஜெயந்த் படிப்பில் சிறந்து விளங்கினாா். மேலும் தேசிய மாணவா் படையில் பங்கேற்று சிறப்பாகச் செயல்பட்டாா். கல்லூரி பருவத்தில் தேசிய மாணவா் படையில் துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் பங்கேற்று மாநில அளவில் பரிசுகள் பெற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com