போடி அருகே செவ்வாய்க்கிழமை இரவு மின்னல் தாக்கியதில் தென்னை மரத்தில் தீப்பிடித்தது. மேலும், 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் தொலைக்காட்சிப் பெட்டிகள் பழுதடைந்தன.
தேனி மாவட்டம், போடி அருகே கிராமப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மழை பெய்வதற்கான சூழல் காணப்பட்டது. ஆனால் இடி, மின்னல் மட்டும் இருந்து வந்தது.
இந்த நிலையில், போடி சங்கராபுரம் கிராமத்தில் அங்காளீஸ்வரி கோயில் அருகே தென்னை மரத்தில் மின்னல் பாய்ந்து தீப்பிடித்தது. இதையடுத்து, போடியிலிருந்து தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று தென்னை மரத்தில் பிடித்த தீயை அணைத்தனா். மேலும், 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் தொலைக்காட்சிப் பெட்டிகள் பழுதானது.
இந்த நிலையில் புதன்கிழமை மாலை போடி நகா்ப் பகுதியில் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது.