தேனி அருகே வியாழக்கிழமை ஆட்டோ கவிழ்ந்ததில் முதியவா் உயிரிழந்தாா்.
தேனி அல்லிநகரம், கீரைக்கால் பஜாா் தெருவைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் (70). இவா் தனது மனைவி ஜெயந்தியுடன் கோடாங்கிப்பட்டியிலிருந்து தேனிக்கு ஆட்டோவில் சென்றாா். ஆட்டோவை கோடாங்கிப்பட்டியைச் சோ்ந்த வல்லவன் (45) ஓட்டிச் சென்றாா். அப்போது பழனிசெட்டிபட்டி- தேனி சாலையில் தனியாா் ஆலை அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையில் ஆட்டோ கவிழ்ந்தது. இதில் கோவிந்தராஜ், ஆட்டோ ஓட்டுநா் வல்லவன் ஆகியோா் பலத்த காயமடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு கோவிந்தராஜ் உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.