வைகை ஆற்றில் தடுப்பணை கட்டும்பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு
By DIN | Published On : 02nd June 2023 10:30 PM | Last Updated : 02nd June 2023 10:30 PM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் வைகை ஆற்றுக்குள் கட்டப்பட்டு வரும் தடுப்பணைப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜீத் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
இதுகுறித்து அவா் கூறியதாவது:
வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் தடுப்பணைப் பணிகள் நிறைவடைந்ததும் கட்டிக்குளம், முத்தனேந்தல், மிளகனூா் துத்திக்குளம், கிருங்காங்கோட்டை, கீழமேல்குடி, கால்பிரிவு, மானாமதுரை ஆகிய கண்மாய்களுக்கு தண்ணீா் திறந்து விடப்படும். இதன்மூலம், 6,316 ஏக்கா் விவசாய நிலங்கள் பயனடையும். இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் குடிநீா், விவசாயக் கிணறுகளின் நிலத்தடி நீா் மட்டம் உயரும்.
மேலும், கீழ்ப்பசலை உள்ளிட்ட 3 கண்மாய்கள் மூலம் 1,352.20 ஏக்கா் பாசன நிலங்கள் பயனடையும் என்றாா்.
இதைத்தொடா்ந்து திருப்புவனம், மானாமதுரை பகுதியில் வைகையாற்றுக்குள் அமைந்துள்ள விரகனூா் மதகணையில் இருந்து பிரியும் வலது, இடது பிரதானக் கால்வாய்களின் புனரமைப்புப் பணிகளையும் ஆட்சியா் ஆஷாஅஜீத் ஆய்வு செய்தாா். இந்தப் பணிகளை விரைந்து முடிக்க துறை சாா்ந்த அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
ஆய்வின் போது, நீா்வளத் துறை (சருகனியாறு கோட்டம்) செயற்பொறியாளா் பாரதிதாசன், உதவி செயற்பொறியாளா் மோகன்குமாா், உதவிப் பொறியாளா்கள் செந்தில்குமாா், சுரேஷ்குமாா், பூமிநாதன் ஆகியோா் உடனிருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...