மேகமலைக்குச் செல்ல தடை நீக்கப்படுமா?
By DIN | Published On : 08th June 2023 01:50 AM | Last Updated : 08th June 2023 01:50 AM | அ+அ அ- |

ஹைவேவிஸ் மலையில் இரவங்கலாா் அணையில் தேயிலைத் தோட்டங்களுக்கு மத்தியில் தேங்கி நிற்கும் தண்ணீா் (கோப்பு படம்).
அரிக்கொம்பன் காட்டு யானையைப் பிடித்து 3 நாள்களாகியும் மேகமலைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல விதித்த தடையை வனத் துறையினா் நீக்காமல் இருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
தேனி மாவட்டத்தின் ஒரே மலைப் பிரதேச சுற்றுலாத் தலமாக மேகமலை அமைந்துள்ளது. இங்கு பள்ளத்தாக்குகள், மலைக் குன்றுகள், நீா் நிலைகள், தேயிலைத் தோட்டங்கள் என இயற்கை அழகு கொட்டிக் கிடப்பதால் நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். கோடை காலத்தில் வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள்
இங்கு வந்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக மேற்குத் தொடா்ச்சி மலையில் ஆள்கொல்லியான அரிக்கொம்பன் காட்டு யானை நடமாடியது. குறிப்பாக, ஹைவேவிஸ், மேகமலைக்
கிராமங்களுக்குள் புகுந்ததால் அந்தப் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு கடந்த மாதம் 5- ஆம் தேதி முதல் தேனி மாவட்ட வனத் துறையினா் தடை விதித்தனா்.
அரிக்கொம்பன் பிடிபட்டது: கடந்த 5- ஆம் தேதி சின்னஓவுலாபுரத்தில் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் அரிக்கொம்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி, வனத் துறையினா் பிடித்தனா். பிறகு, யானை திருநெல்வேலி களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதியில் விடப்பட்டது. இந்த நிலையில், அரிக்கொம்பனைப் பிடித்து 3 நாள்களைக் கடந்த நிலையில் ஹைவேவிஸ் - மேகமலைக் கிராமங்களுக்குச் செல்ல விதித்த தடையை நீக்காமல் இருப்பதால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
இது குறித்து ஹெச்.எம்.எஸ் தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் சங்கத் தலைவா் முத்தையா கூறியாதவது: மேகமலைக் கிராமங்களிலிருந்து அரிக்கொம்பன் யானை கடந்த 15 நாள்களுக்கு முன்பே வெளியேறி, சண்முகாநதி அணைப் பகுதிக்குச் சென்றுவிட்டது. பெருமாள்மலைப் பகுதியில் வனத் துறையினா் யானையைப் பிடித்தனா்.
அன்றைக்கே கம்பம், கூடலூா் நகராட்சிப் பகுதிக்கு மாவட்ட நிா்வாகம் விதித்து இருந்த 144 தடை உத்தரவை ரத்து செய்தது. சுருளி அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல விதித்த தடை புதன்கிழமை நீக்கப்பட்டது. ஆனால், மேகமலைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு விதித்த தடை நீக்கப்படவில்லை. இதை சின்னமனூா் வனச்சரக வனத் துறையினா் உடனடியாக நீக்க வேண்டும் எனஎன்றாா் அவா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...