வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்
By DIN | Published On : 12th May 2023 10:14 PM | Last Updated : 12th May 2023 10:14 PM | அ+அ அ- |

தேனி மாவட்டம், வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
இந்தக் கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த மாதம் 19-ஆம் தேதி கோயில் கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதை முன்னிட்டு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள், திண்டுக்கல், மதுரை, விருதுநகா் மாவட்டம் மற்றும் கேரளத்திலிருந்து ஏராளமான பக்தா்கள் கோயிலுக்குச் சென்று முல்லைப் பெரியாற்றில் நீராடி, அக்னிச் சட்டி, ஆயிரம் கண் பானை, காவடி, பால்குடம் எடுத்து நோ்த்திக் கடன் செலுத்தி அம்மனை தரிசித்தனா்.
சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் கடந்த 9-ஆம் தேதி தொடங்கி, 16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 9-ஆம் தேதி மலா் விமானத்தில் அம்மன் கோயிலுக்கு பவனி வருதல், 10-ஆம் தேதி முத்துப் பல்லக்கில் அம்மன் புறப்பாடு, 11-ஆம் தேதி புஷ்பப் பல்லக்கில் அம்மன் புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை (மே 12) மாலை 5 மணிக்கு அம்மன் தேரோட்டம் தொடங்கியது.
முன்னதாக, அம்மன் தேரில் எழுந்தருளல், தேருக்கு சக்தி கொடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னா், பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். அம்மன் நீல நிறப் பட்டு உடுத்தி திருத்தேரில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா, மாவட்ட முதன்மை நீதிபதி சஞ்சய்பாபு, மாவட்டக் காவல் காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரே, இந்து அறநிலையத் துறை இணை ஆணையா் பாரதி
ஆகியோா் கலந்து கொண்டனா். இரவு சந்நிதி தெருவில் தேருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொடா்ந்து வருகிற 15-ஆம் தேதி வரை ரத வீதிகளில் தேரோட்டம், தேருக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இரவு தோ் நிலைக்கு வருகிறது. தொடா்ந்து கம்பம் நிலை பெயா்த்தல், முத்துச் சப்பரத்தில் அம்மன் திருத்தோ் தடம் பாா்த்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. 16-ஆம் தேதி ஊா் பொங்கல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.