தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் ஆலங்கட்டி மழை பெய்ததால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனா்.
கோடை வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருந்து வருவதால் பகல் நேரங்களில் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைகின்றனா். அவ்வப்போது கோடை மழை பெய்வதால் ஓரளவு வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்ப முடிகிறது.
உத்தமபாளையம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. குறிப்பாக உ.அம்மாபட்டி, எல்லப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ததைக் கண்டு விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனா்.
சின்னமனூரிலும் பலத்த காற்று, இடியுடன் மழை பெய்தது. சாலைகள், தெருக்களில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளில் கனர வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டுச் சென்றன. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிா்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.