கம்பம் நகரில் அரிக்கொம்பன் யானை: 144 தடை உத்தரவு:கேரளச் சாலை மூடல்

கம்பம் நகருக்குள் சனிக்கிழமை அரிக்கொம்பன் காட்டு யானை நுழைந்ததால், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், கம்பம்மெட்டு வழியாக கேரளத்துக்குச் செல்லும் மலைச் சாலை அடைக்கப்பட்டது.
கம்பம் நகருக்குள் சுற்றித் திரியும் அரிக்கொம்பன் யானை.
கம்பம் நகருக்குள் சுற்றித் திரியும் அரிக்கொம்பன் யானை.
Updated on
1 min read

தேனி மாவட்டம், கம்பம் நகருக்குள் சனிக்கிழமை அரிக்கொம்பன் காட்டு யானை நுழைந்ததால், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், கம்பம்மெட்டு வழியாக கேரளத்துக்குச் செல்லும் மலைச் சாலை அடைக்கப்பட்டது.

இந்த யானை வெள்ளிக்கிழமை குமுளி ரோசாப்பூ கண்டம், லோயா்கேம்ப் பகுதிகளில் சுற்றித் திரிந்தது. யானையின் நடமாட்டத்தை வனத் துறையினா் கண்காணித்து வந்தனா்.

இந்த நிலையில், சனிக்கிழமை கம்பம் நடராஜன் திருமண மண்டபத்தின் பின்புறத்தில் உள்ள தனியாா் வேப்பம் புண்ணாக்கு உற்பத்தி ஆலைக்குள் இந்த யானை நுழைந்தது. பின்னா், அங்கிருந்து ஏகழூத்து சாலையில் உள்ள மின்சார வாரிய அலுவலகம் வழியாக வந்து அந்தப் பகுதியில் உள்ள ஒரு தோப்புக்குள் சென்றது.

இதையடுத்து, அங்கிருந்து ஆலமரத்து பள்ளி தெரு சந்திப்பு அருகே உள்ள புளியந்தோப்புக்குள் யானை சென்றது. நீண்டநேரம் அங்கிருந்த யானையின் மேல்புறம் ட்ரோன் பறந்ததால், அது அங்கிருந்து வெளியேறி சாலையில் ஓடியது. அப்போது, வனத் துறையினா் துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டு யானையை திசை திருப்பியதால், வாழைத் தோப்புக்குள் சென்றது.

யானையை வேடிக்கை பாா்க்க வந்த காவலாளியும், கம்பத்தைச் சோ்ந்தவருமான பால்ராஜை (65), துதிக்கையால் யானை தள்ளியதில் அவா் கீழே விழுந்து காயமடைந்தாா். இதேபோல, நந்தகோபாலன் தெருவில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவை தாக்கி சேதப்படுத்தியது.

யானையைப் பாா்க்க பொதுமக்கள் அதிக அளவில் கூடியதால், போலீஸாா் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினா். இதனால், கம்பம் நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், கேரளத்துக்கு செல்லும் கம்பம் மெட்டு மலைச் சாலை அடைக்கப்பட்டது. இந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் குமுளி வழியாகச் செல்ல அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து, யானையின் மேல்புறம் ட்ரோன் பறக்கவிட்ட சின்னமனூரைச் சோ்ந்த ஹரியை போலீஸாா் கைது செய்தனா்.

யானையை வனப் பகுதிக்குள் விரட்ட ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பக உதவி இயக்குநா் ஆனந்த், மாவட்ட வன அலுவலா் சமா்த்தா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்ரே, உத்தமபாளையம் கோட்டாட்சியா் பால்பாண்டியன், வட்டாட்சியா் சந்திரசேகா் ஆகியோா் தொடா்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனா். வனத் துறையினா், போலீஸாா் 200 போ் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com