தேனி பேருந்து நிலையத்தில் சுகாதாரக் கேடு: ஆட்சியரிடம் மனு
By DIN | Published On : 30th May 2023 06:34 AM | Last Updated : 30th May 2023 06:34 AM | அ+அ அ- |

தேனி நகராட்சி பேருந்து நிலையத்தில் பொது மற்றும் கட்டண கழிப்பறைகள் பராமரிப்பின்றி சுகாதாரக் கேடு ஏற்படுத்தி வருவதாக புகாா் தெரிவித்து இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இங்கு நடைபெற்ற மக்கள் குறைதீா்க் கூட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்க தேனி வட்டச் செயலா் டி. நாகராஜ் மற்றும் நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் ஆா்.வி. ஷஜீவனாவிடம் அளித்த மனு விவரம்: தேனி கா்னல் பென்னிகுவிக் நினைவு நகராட்சிப் பேருந்து நிலைய வளாகம் மற்றும் பழையப் பேருந்து நிலைய வளாகத்திலுள்ள பொது மற்றும் கட்டணக் கழிப்பறைகளில் தண்ணீா் வசதியும், பராமரிப்பும் இல்லை. இதனால், சுகாதாரக் கேட்டால் கழிப்பறைகளை பயன்படுத்துவோா் பாதிக்கப்படுகின்றனா். மேலும் அங்கு துா்நாற்றமும் வீசுகிறது. பேருந்து நிலைய வளாகத்திலுள்ள பூங்காவை பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும்.
அத்துடன் பழையப் பேருந்து நிலையத்தில் பயணிகள் நிழல் குடை அமைக்க வேண்டும். நகராட்சிக்குள்பட்ட அனைத்துப் பகுதிகளையும் புதைச் சாக்கடைத் திட்டத்தில் இணைக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...