ஆண்டிபட்டியில் சூறைக் காற்றுடன் பலத்த மழை
By DIN | Published On : 30th May 2023 06:35 AM | Last Updated : 30th May 2023 06:35 AM | அ+அ அ- |

ஆண்டிபட்டியில் திங்கள்கிழமை, சூறைக் காற்றுடன் பெய்த பலத்த மழையால் மரங்கள், மின் கம்பம் சாய்ந்து விழுந்தது சேதமடைந்தன.
தேனி, ஆண்டிபட்டி பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரித்த நிலையில், பிற்பகல் 3 மணிக்கு சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. ஆண்டிபட்டியில் வீசிய சூறைக் காற்றால் சக்கம்பட்டி, திருவள்ளுவா் குடியிருப்பில் உள்ள அரச மரம் வேரோடு சாய்ந்தது. இதில், மரத்தின் கீழே நிறுத்தியிருந்த காா் சேதமடைந்தது. சக்கம்பட்டி, முத்துமாரியம்மன் கோயில் பகுதியில் வீடுகளில் மேற்கூரைத் தகரம், ஜன்னல்கள் பலத்த காற்றால் சேதமடைந்தன. 7 இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால், அந்தப் பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பேரூராட்சி மற்றும் மின் வாரியப் பணியாளா்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனா்.
உத்தமபாளையம்: தேனி மாவட்டத்தில் வழக்கமாக அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் சற்று குறைவாகவே இருக்கும். ஆனால், இந்தாண்டு அனைத்து மாவட்டங்களிலும் கத்திரி வெயில் வறுத்தெடுத்தது. அவ்வப்போது கோடை மழை பெய்தாலும் மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பெரும்பான்மையான மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரியைக் கடந்தது. இந்த நிலையில், உத்தமபாளையம் பகுதியில் திங்கள்கிழமை மாலை பலத்த மழையுடன் அக்னி நட்சத்திர வெயில் விடை பெற்றது. இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...