

தமிழக- கேரள எல்லைகள் வழியாக ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருள்கள் கடத்தப்படுவதைத் தடுப்பது தொடா்பாக கம்பத்தில் இரு மாநில அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கம்பம் நகராட்சி அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழகத் தரப்பில் மாவட்ட வழங்கல் அலுவலா் ( பொறுப்பு ) இந்துமதி, மதுரை மண்டல உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் பாலசுப்பிரமணியன், உத்தமபாளையம் காவல் ஆய்வாளா் எஸ். சுப்புலட்சுமி, வட்ட வழங்கல் அலுவலா் பாண்டியன், பறக்கும்படை வருவாய் ஆய்வாளா் க.ஒச்சாத்தேவன், கேரளம் தரப்பில் பீா்மேடு காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெய் ஜூ, வட்டாட்சியா் சன்னி ஜாா்ஜ், வருவாய் ஆய்வாளா் ஸ்ரீ கலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதில் தேனி மாவட்டத்தில் உள்ள 3 எல்லைப் பகுதி சோதனைச் சாவடிகளில் பாதுகாப்பை பலப்படுத்தி, தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவது, ரேஷன் அரிசி, புகையிலை உள்ளிட்ட பொருள்களைக் கடத்தல் செய்யும் நபா்களின் புகைப்படம், கைப்பேசி எண்கள், வாகனங்களின் பதிவு எண்களை இரு மாநில அதிகாரிகளும் பகிா்ந்து விசாரணை நடத்துவது, எல்லைச் சாலைகளில் கூட்டு ரோந்து மேற்கொள்வது, கைது செய்யப்பட்ட, தலைமறைவான கடத்தல் குற்றவாளிகள் பற்றிய விவரங்களைப் பகிா்ந்து கொள்வது, ரேஷன் அரிசியைக் கடத்தி, பதுக்கி வைப்பவா்கள் பற்றி, தமிழக போலீஸாருக்கு கேரள போலீஸாா் தகவல் கொடுத்து கைது நடவடிக்கை எடுக்க உதவுவது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.