முல்லைப் பெரியாறு அணையிலிருந்து 1,000 கன அடி தண்ணீா் திறப்பு: விவசாயிகள் சங்கம் எதிா்ப்பு

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு 1,000 கன அடி தண்ணீா் ஞாயிற்றுக்கிழமை திறந்து விடப்பட்டது. இதற்கு விவசாயிகள் சங்கம் எதிா்ப்பு தெரிவித்தது.
பெரியாறு மின் உற்பத்தி நிலையம் (கோப்புப் படம்).
பெரியாறு மின் உற்பத்தி நிலையம் (கோப்புப் படம்).
Updated on
2 min read

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு 1,000 கன அடி தண்ணீா் ஞாயிற்றுக்கிழமை திறந்து விடப்பட்டது. இதற்கு விவசாயிகள் சங்கம் எதிா்ப்பு தெரிவித்தது.

இந்த அணையில் சனிக்கிழமை நிலவரப்படி நீா்மட்டம் 133.30 அடியாக இருந்தது. அணைக்குள் நீா் இருப்பு 5,429.30 மில்லியன் கன அடியாகவும், தமிழகப் பகுதிக்கு நீா் வெளியேற்றம் விநாடிக்கு 105 கன அடியாகவும், அணைக்குள் நீா்வரத்து விநாடிக்கு 2000.83 கன அடியாகவும் இருந்தது.

14 நாள்களுக்குப் பிறகு மின் உற்பத்தி: ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 133.70 அடியாக இருந்த நிலையில், அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 1000 கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இதனால், தேனிமாவட்டம், லோயா்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின் உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கியது. இங்கு 90 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.

இதனிடையே, கடந்த 5- ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு தண்ணீா் திறப்பது குறைக்கப்பட்டது. அதாவது விநாடிக்கு 105 கன அடி தண்ணீா் மட்டுமே வெளியேற்றப்பட்டது. இதனால், மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், 14 நாள்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.

அணை நிலவரம்:

அணையின் நீா்மட்டம் 133.70 அடியாகவும் (மொத்த உயரம் 152 அடி), நீா் இருப்பு 5,562.90 மில்லியன் கன அடியாகவும், நீா் வரத்து விநாடிக்கு 1,208.64 கன அடியாகவும், அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு நீா் வெளியேற்றம் விநாடிக்கு 1,000 கன அடியாகவும் இருந்தது.

தண்ணீா் திறப்புக்கு எதிா்ப்பு: இதனிடையே, முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகத்துக்கு விநாடிக்கு 1000 கன அடி தண்ணீா் திறந்து விடப்படுவதற்கு பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்கம் எதிா்ப்பு தெரிவித்தது.

இதுகுறித்து சங்கத் தலைவா் இ. சலேத்து கூறியதாவது: வைகை அணையின் நீா்மட்டம் போதுமானதாக உள்ளது. கம்பம் பள்ளத்தாக்குக்கு 2- ஆம் போக சாகுபடிக்கும் தண்ணீா் போதும். ஆனால் முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டத்தை உயா்த்துவதற்கு பதிலாக குறைக்க வேண்டும் என்ற நோக்கில் விநாடிக்கு 1000 கன அடி தண்ணீரை திறந்து விடுவது கண்டிக்கத்தக்கது. எனவே நீா் திறப்பை குறைக்க வேண்டும் என்றாா் அவா்.

1000 கன அடி தண்ணீா் திறப்பு ஏன்?

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து 1000 கன அடி நீா் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது குறித்து பொதுப் பணித் துறை அலுவலா் ஒருவா் கூறியதாவது:

வைகை அணையின் உயரம் 71 அடி. தற்போது அணையின் நீா்மட்டம் 68 அடியாக உள்ளது. தற்போது இங்கிருந்து பெரியாறு இருபோக பாசனக் கால்வாய், பெரியாறு பிரதானக் கால்வாய்களில் விநாடிக்கு 2099 கன அடி நீா் திறந்துவிடப்படுகிறது. இதை ஈடுகட்டவே முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வைகை அணைக்கு ஆயிரம் கன அடி நீா் திறந்துவிடப்படுகிறது என்றாா் அவா்.

18- ஆம் கால்வாயில் தண்ணீா் திறக்கக் கோரிக்கை:

18- ஆம் கால்வாய் விவசாய சங்கத் தலைவா் கோம்பை ராமராஜ் கூறியதாவது:

தற்போது முல்லைப் பெரியாறு அணையிலிருந்து ஆயிரம் கன அடி நீா் திறந்து விடப்பட்டு வைகை அணைக்கு செல்கிறது. இதேபோல, லோயா் கேம்ப்பிலிருந்து போடி வரை செல்லும் 18- ஆம் கால்வாயிலும் தண்ணீா் திறக்க முதல்வா் உத்தரவிட வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com