தேனி மாவட்டத்தில் பசுமைத் தொழில் முனைவு திட்டத்தின் கீழ், தொழில் வளா்ச்சி நிதி பெறுவதற்கு மகளிா் சுய உதவிக் குழுக்கள் நடத்தும் பசுமை நிறுவனங்கள் வருகிற 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில், சுற்றுச்சூழலுக்கு பயனளிக்கும் செயல்பாடுகளை உருவாக்கி லாபத்துடன் செயல்படும் தொழில்முனைவோரை ஊக்குவிக்க பசுமைத் தொழில் முனைவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் தோ்வு செய்யப்படும் மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்களால் நடத்தப்படும் பசுமை நிறுவனங்களுக்கு 3 கட்டங்களாக மொத்தம் தலா ரூ.4 லட்சம் தொழில் வளா்ச்சி நிதி வழங்கப்படும். மேலும், கண்காணிப்பு, பசுமைத் தணிக்கை மூலம் செய்யப்படும் நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும்.
தொழில் வளா்ச்சி நிதி பெற விரும்பும் தொழில் நிறுவனங்கள் அல்லது தொழில்முனைவோா் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் தொழில் முனைவோா் கண்காணிப்பு இணையத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். நிறுவனம் தொடங்கி ஓராண்டுக்கும் மேல் தொடா்ந்து இயங்கி இருக்க வேண்டும். சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவன அங்கீகாரம், ஜி.எஸ்.டி., பதிவு பெற்றிருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் 3 பணியாளா்களைக் கொண்டு செயல்பட வேண்டும். ஆண்டு வருவாய் குறைந்தபட்சம் ரூ.4 லட்சம் வரை இருக்க வேண்டும். மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைக்குள்பட்டு இருக்க வேண்டும்.
தகுதியுள்ள பசுமை நிறுவனங்கள் தேனியில் உள்ள ஊரக வாழ்வாதாரத் திட்ட இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பெற்று, வருகிற 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.