தேனி மாவட்டம், லோயர்கேம்ப்பில் மின்சார உற்பத்தி திங்கள்கிழமை நிறுத்தப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது குறைக்கப்பட்டதன் காரணமாக லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு நீர் மின்சார உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
முழு உற்பத்தி
ஜன. 4 வரை முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் விநாடிக்கு 1,867 கன அடி திறந்துவிடப்பட்டதால் லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் 4 மின்னாக்கிகள் மூலம் 168 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. பின்னர் புயல்மழை காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து பெரியாறை தவிர்த்து மூலவைகை, கொட்டகுடி போன்ற இதர நீர்வரத்து பகுதிகளில் அதிகமாக வந்ததால் வைகை அணை முழு கொள்ளளவான 71 அடி உயரத்தை எட்டியது. இதன் காரணமாக பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டு ஜன. 5 முதல் விநாடிக்கு 511 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதன் மூலம் பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் 45 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.
மின் உற்பத்தி நிறுத்தம்
இந்த நிலையில் வைகை அணைக்கு இதர பகுதிகளில் இருந்து தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் 71 அடி உயரத்தை தொடர்ந்தது. அதனால் பெரியாறு வைகை பாசன பிரிவு பொறியாளர் உத்தரவின் பேரில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பை நிறுத்த உத்தரவிட்டார். அதன் பேரில் திங்கள்கிழமை முதல் தமிழக பகுதிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. அதனால் லோயர்கேம்ப்பில் மின்சார உற்பத்தியும் நின்றது.
அணை நிலவரம்
திங்கள்கிழமை காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 137.25 அடி உயரமாக இருந்தது.(மொத்த உயரம் 152 அடி), அணையில் நீர் இருப்பு 6,433 மில்லியன் கன அடி, அணைக்குள் நீர் வரத்து விநாடிக்கு 895.87 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் விநாடிக்கு 105 கன அடியாகவும் இருந்தது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான பெரியாறு அணை மற்றும் தேக்கடி ஏரியில் மழை பெய்யவில்லை.