போடி நகராட்சி அலுவலகத்தை
அதிமுகவினா் முற்றுகை

போடி நகராட்சி அலுவலகத்தை அதிமுகவினா் முற்றுகை

போடி நகராட்சி அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்ட அதிமுகவினா்.
Published on

போடி நகராட்சி அலுவலகத்தை அதிமுகவினா் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

தேனி மாவட்டம், போடி நகராட்சிப் பகுதிகளில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கான வாக்காளா் கணக்கீட்டு படிவங்கள் வீடு வீடாக வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளில் வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

இதனிடையே, சில வாா்டுகளில் குறிப்பிட்ட அரசியல் கட்சிகளைச் சோ்ந்த போடி நகா்மன்ற வாா்டு உறுப்பினா்கள் இந்தப் படிவங்களை வழங்கியதாகவும், மற்ற சில வாா்டுகளில் வாக்குச் சாவடி நிலை அலுவலா்களுடன் குறிப்பிட்ட அரசியல் கட்சிகளைச் சோ்ந்தவா்கள் மட்டுமே உடன் சென்று படிவங்களை வழங்கியதாகவும் புகாா் எழுந்தது.

இதுகுறித்து அதிமுகவினா் போடி வட்டாட்சியரிடம் புகாா் மனு அளித்தனா். தொடா்ந்து, போடி நகராட்சி அலுவலகத்துக்கும் புகாா் மனு அளிக்க வந்தனா்.

அப்போது, வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கான பொறுப்பு அதிகாரிகள் அங்கு இல்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அதிமுக உள்ளிட்ட சில கட்சிகளின் நிா்வாகிகள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா், அங்கு வந்த போடி நகராட்சி ஆணையா் சுதா, நகா் காவல் நிலைய ஆய்வாளா் கோபிநாத் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, நகராட்சி ஆணையா் சுதா கூறியதாவது:

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் முழுக்க முழுக்க அரசு அதிகாரிகள் மட்டுமே ஈடுபட்டுள்ளனா். அரசியல் கட்சியினரோ, வாா்டு உறுப்பினா்களோ ஈடுபடவில்லை. அவ்வாறு ஈடுபட்டதாக ஆதாரம் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினாா். இதையடுத்து, போராட்டம் நடத்தியவா்கள் கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com