முல்லைப் பெரியாறு விவகாரம்! குமுளியில் நவ.1-இல் உண்ணாவிரதம்: விவசாயிகள் அறிவிப்பு
முல்லைப்பெரியாறு அணையில் மத்திய துணை ராணுவப் படையினரை பாதுகாப்புப் பணியில் நியமிக்க வலியுறுத்தி, தமிழக எல்லையான குமுளியில் வருகிற நவ.1-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுமென பெரியாறு-வைகை பாசன விவசாயிகள் சங்க கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
கேரள மாநிலம், திரிச்சூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு முல்லைப்பெரியாறு அணையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக அண்மையில் மின்னஞ்சல் வந்தது.
இதையடுத்து, கேரள மாநில வெடிகுண்டு நிபுணா்கள் அணைப்பகுதியில் சுமாா் 3 மணி நேரம் நடத்திய சோதனையில் இது புரளி எனத் தெரியவந்தது. இதேபோல, கடந்தாண்டும் முல்லைப் பெரியாறு அணைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து பெரியாறு - வைகை பாசன விவசாயிகள் சங்கத் சங்கத்தலைவா் மனோகரன் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் கம்பத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் அந்தச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் பென்னிக்குயிக் பாலசிங்கம் பேசியதாவது: முல்லைப் பெரியாறு அணையில் மத்திய துணை ராணுவப் படையினரை பாதுகாப்புப் பணியில் நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கம்பத்தில் ஞாயிற்றுக்கிழமை (அக்.26) நடைபெறுதாக அறிவிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் தொடா் மழை காரணமாக ஒத்திவைக்கப்படுகிறது.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற நவ.1-ஆம் தேதி தமிழக எல்லையான குமுளியில் நீதிமன்ற அனுமதி பெற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.

