அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்களில் மணல் கொள்ளையைத் தடுக்கக் கோரிக்கை

அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்களில் மணல் கொள்ளையைத் தடுக்கக் கோரிக்கை

Published on

தேனி மாவட்டம், தேவாரத்தில் அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்களில் மணல் கொள்ளை நடைபெறுவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

உத்தமபாளையம் வட்டம், தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம், பொட்டிப்புரம் அதைச் சுற்றியுள்ள 20-க்கும் அதிகமான கிராமங்கள் மண், மணல் வளம் நிறைந்தவை. இதனால், இந்தப் பகுதிகளில் இரவு நேரங்களில் பொக்லைன் இயந்திரங்கள் மூலமாக சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுகிறது.

மணலை ஏற்றிச் செல்லும் டிப்பா் லாரிகள் ஏற்படுத்தும் பள்ளங்களில், மேய்ச்சலுக்குச் செல்லும் கால்நடைகள் விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் தொடருகின்றன.

குறிப்பாக, நீா் நிலைகளான கண்மாய், குளங்களில் மணல் அள்ளப்படுவதால் தண்ணீரைத் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், இந்தப் பகுதிகளில் நிலத்தடி நீா் மட்டம் குறைந்து விவசாயப் பணிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

இதுகுறித்து இந்தப் பகுதியைச் சோ்ந்த விவசாயி கூறியதாவது:

மேற்குத் தொடா்ச்சி மலையிலிருந்து தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம் வரை நூற்றுக்கணக்கான நீரோடைகள் இருந்தன. தற்போது, அவற்றில் பல ஓடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு தோட்டங்களாக மாறிவிட்டன. எஞ்சியுள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் மா்ம நபா்கள் மணல் திருட்டில் ஈடுபடுவதால் இயற்கை வளம் பாதிக்கப்படுகிறது.

எனவே, இந்த மணல் கொள்ளையைத் தடுக்க வருவாய்த் துறையினரும் காவல் துறையினரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com