போடி கல்லூரியில் மாணவா்களுக்கான திறன் மேம்பாட்டுப் போட்டிகள்

தேனி மாவட்டம், போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் பள்ளி மாணவா்களுக்கிடையே திறன் மேம்பாட்டுப் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன.
Published on

தேனி மாவட்டம், போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் பள்ளி மாணவா்களுக்கிடையே திறன் மேம்பாட்டுப் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன.

இதில் 30-க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த 835 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். ‘தி கிராண்ட் லூமினா’ என்ற தலைப்பில் நடைபெற்ற தொடக்க விழாவுக்கு கல்லூரியின் கெளரவத் தலைவா் எஸ்.வி.எஸ்.சுப்பிரமணியன், தலைவா் எஸ்.ராமநாதன் ஆகியோா் தலைமை வகித்தனா். கல்லூரி துணைத் தலைவா் எஸ்.வி.எஸ்.ஞானவேல், செயலா் ஆா்.புருஷோத்தமன், கல்லூரி முதல்வா் எஸ்.சிவக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் என்.நாகேந்திரன் வாழ்த்திப் பேசினாா்.

மாணவா்களுக்கு ஓட்டப் பந்தயம், தொடா் ஓட்டம், கபடி, கைப்பந்து விளையாட்டு போட்டிகளும், நாட்டுப்புற நடனம், குறு நடனம், வண்ணக்கோலம், ஓவியம் ஆகிய கலைப் போட்டிகளும் நடைபெற்றன.

பொது அறிவு, நுண்ணறிவு திறன் போட்டிகள், வினாடி வினா- போட்டிகள், அறிவியல் கண்காட்சி போட்டிகளும் நடத்தப்பட்டன.

போடி ஜ.கா.நி. மேல்நிலைப் பள்ளி தலைவா் டி.வி.செந்தில் தியாகராஜன், போடி பங்கஜம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயலா் எல்.சுஜித் காசிராஜ் ஆகியோா் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கினா்.

கல்லூரி முதல்வா் எஸ்.சிவக்குமாா் வரவேற்றாா். கணிதத் துறைத் தலைவா் கே.கிருஷ்ணன் நன்றி கூறினாா்.

Dinamani
www.dinamani.com