

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே உள்ள எம். மீனாட்சிபுரம் உள்ளிட்ட பல கிராமங்களில் தாமிரவருணிக் குடிநீா் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.
எம். மீனாட்சிபுரம், மறவா் பெருங்குடி, வெள்ளையாபுரம் உள்ளிட்ட பல கிராமங்களில் நிலத்தடிநீா் உவா்ப்பாக உள்ளதால், அதை கிராமத்தினா் குடிநீராகப் பயன்படுத்த இயலவில்லை. இதனால் இக்கிராமங்களுக்கு தாமிரவருணி கூட்டுக்குடிநீா்த் திட்டம் மூலம் கடந்த சில ஆண்டுகளாகக் குடிநீா் விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த இருவாரங்களுக்கு முன்னா் திடீரென தாமிரவருணி குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டுவிட்டது. இதற்கான காரணத்தை ஊராட்சி நிா்வாகம் தெரிவிக்க வில்லை. இந்நிலையில் மறவா்பெருங்குடியில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் உள்ள ஆழ்துளைக்கிணற்றுநீா் குடிநீராகப் பயன்படுத்த உகந்ததாக உள்ளதால், இந்த மூன்று கிராமத்தினருமே இக்குழாயில் தண்ணீா் பிடிக்கின்றனா். இதில் நேரம் விரையமாவதுடன், தட்டுப்பாடும் நிலவுகிறது. இதன் காரணமாக அதிக விலை கொடுத்து தனியாரிடம் குடிநீா் பெறும் நிலைக்கு இக்கிராமத்தினா் தள்ளப்பட்டுள்ளனா்.
எனவே விரைவில் மாற்று ஏற்பாடு மூலம் குடிநீா் விநியோகம் செய்ய 3 கிராம பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.