புலியூரானில் பயன்பாட்டிற்கு வராத இ-சேவை மையக்கட்டடம் பாழடைந்து நிதி வீணாவதாகப் புகார் எழுந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம் புலியூரான் கிராமத்தில் கட்டிமுடிக்கப்பட்டு கடந்த 5 ஆண்டுகளாகப் பயன்பாட்டிற்குத் திறந்துவிடப்படாத இ-சேவை மையம் பாழடைந்து ரூ14.55 லட்சம் நிதி வீணாகி வருவதாகப் புகார் எழுந்துள்ளது.
புலியூரான் கிராமம் மற்றும் சுற்றவட்ட சிறுகிராமத்தினர் பயன்பெறும்விதமாக சாதிச்சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், விவசாயிகளுக்கான பயிர்க் காப்பீடு கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளைப் பெறும்விதமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் ரூ14.55 லட்சம் நிதியில் கடந்த 2014-15ம் நிதியாண்டில் இ-சேவைமையக் கட்டடம் கட்டப்பட்டது. ஆனால் கட்டடத்தை செயல்பாட்டிற்குக் திறந்துவிட முதலில் மின் இணைப்பு கிடைக்காததாகக்காரணம் சொல்லப்பட்டதாம்.
பின்னர் நிதி அளிக்க இயலாததைக்காரணம் காட்டி ஊரக உள்ளாட்சித்தேர்தல் வந்த பிறகு உரிய நிதி ஒதுக்கீடு செய்து பயன்பாட்டிற்குத் திறந்துவிடப்படும் எனக் கூறப்பட்டதாம். தற்போது இசேவை மையப் பணியாளர்களுக்கு மிக்ககுறைந்த அளவு ஊதியமே வழங்கப்டும் சூழ்நிலை இருப்பதாலும், அவ்வூதியத்திற்கு பணியாளர்கள் வரமறுப்பதாகவும் காரணம் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக இக்கிராமத்தினர் கூறும்போது, ஒரே நபரை அருகிலுள்ள இரு வெவ்வேறு கிராம இ-சேவை மையங்களுக்கும் சேர்த்து காலையில் ஒரு கிராமத்தையும், பிற்பகலில் மற்றொரு கிராமத்தையும் பகுதிநேர ஊழியராக அந்நபரை நியமித்து பணிசெய்யவிடலாம் எனக்கருத்து கூறுகின்றனர். இதனிடையே பயன்பாட்டிற்குவராத கட்டடத்தால் ரூ14.55 லட்சம் நிதி வீணாகி வருவதாக புகார் தெரிவித்துள்ள அவர்கள், பயன்பாட்டை மாற்றியோ அல்லது பிற அரசு அலுவலகங்களுக்காவது அக்கட்டடத்தைப் பயன்படுத்தலாம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.