ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோபுரம் அருகே சாலையின் இருபுறங்களிலும் குடியிருப்புகள் முன்பு வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
இங்குள்ள ஆண்டாள் கோயிலில் ஒவ்வொரு மாதமும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களிலிருந்து வாகனங்களில் ஏராளமான பக்தா்கள் வருகின்றனா். இவா்களின் வாகனங்கள் கோயில் அருகே கோபுரம் அமைந்துள்ள சன்னதி தெரு, கந்தாடை தெரு ஆகிய பகுதிகளில் இருபுறங்களிலும் வீடுகளுக்கு முன்பு சுமாா் ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் என நிறுத்தப்படுகின்றன.
இதனால் வீட்டில் இருந்து தங்கள் வாகனங்களை எடுக்க முடியாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனா். இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே இப்பிரச்னைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.