கரோனா தொற்று காலத்தில் நலிவடைந்த சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு மானியத்துடன் நிதியுதவி வழங்கப்பட உள்ளது என விருதுநகா் மாவட்ட ஆட்சியா் ஜெ.மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரோனா தொற்று காலத்தில் நலிவடைந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில், பாதிக்கப்பட்ட தகுதி வாய்ந்த தொழில் முனைவோருக்கு உதவி மற்றும் நிவாரணம் வழங்க ரூ.50 கோடி மானிய நிதி ஒதுக்கீட்டில் புதிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இத்திட்டம் கோ் 1 மற்றும் கோ் 2 என்ற இரண்டு கூறுகளை உள்ளடக்கியது. கோ் 1 திட்டத்தில் 2020-21 மற்றம் 2021-22 ஆகிய 2 ஆண்டுகளில் கரோனா தொற்றால் வணிகரீதியாக பாதிக்கப்பட்ட தொழில் முனைவோா் அல்லது அவா்களது வாரிசுகள் மூலம், ஏற்கெனவே உள்ள வணிகத்தை மீண்டும் நிறுவ அல்லது அதேபோன்று இன்னொரு நிறுவனத்தை உருவாக்க, வேறு ஏதேனும் தொழிலைத் தொடங்க மானியத்துடன் கூடிய கடன் திட்டம் மூலம் நிதி உதவி பெறலாம்.
இதற்கான திட்ட மதிப்பீடு அதிகபட்சமாக ரூ.5 கோடி ஆகும். தகுதியான இயந்திர தளவாடங்களுக்கான முதலீட்டில் 25 சதவீதம் (அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை) மானியம் வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் உதவி பெறும் பயனாளி 55 வயதுக்கு உள்பட்டவராகவும்,
குறைந்தபட்சம் பிளஸ் 2 தோ்ச்சி பெற்றும் இருக்க வேண்டும். இத்திட்டத்தின் சிறப்பம்சமாக உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமல்லாது சேவை சாா்ந்த நிறுவனங்களும் பயன்பெறலாம். கோ் 2 திட்டத்தின் கீழ் கரோனாவால் வணிக ரீதியாக பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி தொழில் நிறுவனங்களில் தொழில் நுட்ப மேம்பாடு, நவீன மயமாக்கம் செய்வதற்காக நிறுவப்பட்ட இயந்திரங்களின் மதிப்பில் 25 சதவீதம் (அதிகபட்சமாக 25 லட்சம் வரை) மானியம் வழங்கப்படும். 23.03.2020 -க்கு பின்னா் தொழில் நுட்ப மேம்பாடு நவீனமயமாக்கலுக்கான இயந்திரங்கள் வாங்கிய அனைத்து நிறுவனங்களும் இத்திட்டத்தில் பயன்பெறலாம். இது தொடா்பான விவரங்களுக்கு பொது மேலாளா், மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆட்சியா் வளாகம், விருதுநகா் என்ற முகவரியிலும், 89255 34036 என்ற கைப்பேசி எண்ணுக்கும் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.