அமைச்சர் தலைமையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
By DIN | Published On : 11th August 2022 06:36 PM | Last Updated : 11th August 2022 06:36 PM | அ+அ அ- |

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் தலைமையில் அனைவரும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
அருப்புக்கோட்டை தேவாங்கர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். நகர்மன்றத் தலைவர் சுந்தரலட்சுமி, முன்னாள் நகர்மன்றத் தலைவர் சிவப்பிரகாசம், துணைத்தலைவர் பழனிசாமி, சுப்பாராஜ், ஏ.கே.மணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது பேசிய அமைச்சர் ராமச்சந்திரன், மாணவர்களுக்கு சுய ஒழுக்கமும், கல்வியுமே முக்கியமானது. பெற்றோர் மற்றும் தங்களின் நலன் கருதி மாணவர்கள் போதைப்பொருள் பயன்பாட்டை அறவே விட்டொழியவேண்டும் என அவர் பேசினார்.
பின்னர் பந்தல்குடி, அருப்புக்கோட்டை, செம்பட்டி ஆகிய ஊர்களிலுள்ள பள்ளி மாணவ, மாணவியர்க்கான விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி மாணவர்களை ஊக்கப்படுத்திப் பாராட்டு தெரிவித்தார். உடன், திமுக ஒன்றியச் செயலாளர்கள் பொன்ராஜ், பாலகணேசன்,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாபு மற்றும் நகர, ஒன்றிய திமுக நிர்வாகிகள் பலரும், திரளான பள்ளி மாணவ, மாணவியரும் நிகழ்ச்சியில் நேரில் கலந்து கொண்டனர்.