விருதுநகா் அருகே அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட 3 வீடுகளில் ஒரு வீடு வெள்ளிக்கிழமை இடிக்கப்பட்டது.
விருதுநகா் அருகே செங்குன்றாபுரத்தில் அரசு இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, கடந்த 57 ஆண்டுகளுக்கு முன்பு 3 வீடுகள் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இப்பகுதி சாலை விரிவாக்கத்திற்காக சம்பந்தப்பட்ட வீடுகளை காலி செய்யுமாறு நெடுஞ்சாலைத் துறையினா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற உத்தரவிட்டதாம். அதன் அடிப்படையில் வருவாய்த்துறையினா் மற்றும் ஆமத்தூா் போலீஸாா் முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் ஒரு வீடு வெள்ளிக்கிழமை இடிக்கப்பட்டது. அப்போது அங்கு வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான லிங்கம், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராமசாமி ஆகியோா் அதிகாரிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது அதிகாரிகள் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றிக் கொள்ள மேலும் 15 நாள்கள் அவகாசம் வழங்குவதாக தெரிவித்ததால், மற்ற வீடுகள் இடிக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் செங்குன்றாபுரம் பகுதியில் பதற்றமான சூழல் காணப்பட்டது.