சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செல்லிடப்பேசி கோபுரத்தை காணவில்லை என காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஒரு திரைப்படத்தில் நடிகர் வடிவேலு கிணற்றை காணவில்லை என காவல்துறைனரிடம் புகார் கொடுப்பார். அதுபோல சிவகாசி அருகே செல்லிடப்பேசி கோபுரத்தை காணவில்லை என காவல்துறையினரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.
சிவகாசி அருகே திருத்தங்கல் செங்கமலநாச்சியார்புரம் சாலையில் தனியார் செல்லிடப்பேசி கோபுரம் இருந்தது. இந்நிலையில் இந்த கோபுரத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சீரமைக்க தொழில்நுட்ப அலுவலர் ஜெகதீசன் பராமரிப்பு பணிக்கு 2020 ஜூன் மாதம் சென்றுள்ளார். பின்னர் அவர் 2021 மார்ச் மாதம் ஜெகதீசன் தொழில்நுட்ப கோளாறை சரிசெய்ய சென்றபோது அங்கு இருந்த செல்லிடப்பேசி கோபுரத்தை காணவில்லை. மேலும் அது தொடர்பான பொருள்கள் எதுவும் இல்லை.
இதையும் படிக்க: ரேஷன் கடை ஊழியர்களுக்கு 28% அகவிலைப்படி உயர்வு
இது குறித்து செல்லிடப்பேசி கோபுர நிறுவனத்திற்கு, நிலம் கையகப்படுத்தும் அலுவலர் கிருஷ்ணசாமி சிவகாசி நீதித்துறை நடுவரிடம் புகார் செய்தார்.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் திருத்தங்கல் காவல்துறையினர் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதன் மதிப்பு ரூபாய் 16 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.