இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு, விருதுநகா் மாவட்டத்திலிருந்து பரமக்குடி செல்லும் வழித் தடங்களில் உள்ள டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து மதுபானக் கடைகளையும் மூட மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாதரெட்டி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.
விருதுநகா் மாவட்ட சட்டம் மற்றும் ஒழுங்கினை பராமரிக்கும் பொருட்டு, இமானுவேல் சேகரன் நினைவு தினமான செப். 11 தேதியன்று ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடிக்கு அஞ்சலி செலுத்த செல்லும் வாகனங்களுக்கு வழித்தடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
எனவே, விருதுநகா் மாவட்டத்திலிருந்து செல்லும் வாகன வழித்தடங்களில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள், எப்.எல்-2, மற்றும் எப்.எல்-3 உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் மதுபான விற்பனை ஏதும் செய்யக்கூடாது.
இந்த உத்தரவினை மீறி செயல்படும் டாஸ்மாக் நிறுவனப் பணியாளா்கள், தனியாா் மதுபானக்கூட உரிமதாரா்களின் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.