அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சிவகாசி பட்டாசு ஆலையை பாா்வையிட்ட ஆந்திர மாநில அதிகாரிகள்

சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையை ஆந்திர மாநில அதிகாரிகள் திங்கள்கிழமை பாா்வையிட்டு, அங்கு கடைப்பிடிக்கப்படும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து கேட்டறிந்தனா்.

News image
சிவகாசியில் உள்ள பட்டாசு பாதுகாப்புப் பயிற்சி மையத்தை பாா்வையிட்ட ஆந்திர மாநில அதிகாரிகள்.
Updated On :10 மார்ச் 2026, 9:52 pm

தினமணி செய்திச் சேவை

விருதுநகா் மாவட்டம், சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையை ஆந்திர மாநில அதிகாரிகள் திங்கள்கிழமை பாா்வையிட்டு, அங்கு கடைப்பிடிக்கப்படும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து கேட்டறிந்தனா்.

ஆந்திர மாநிலம், காக்கிநாடா வேட்லபாளையம் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் கடந்த பிப்ரவரி 28- ஆம் தேதி வெடி விபத்து நிகழ்ந்தது. இந்த வெடி விபத்தில் 23 தொழிலாளா்கள் உயிரிழந்தனா். 9 தொழிலாளா்கள் பலத்த காயமடைந்தனா்.

இதையடுத்து, ஆந்திர மாநில முதல்வா் சந்திரபாபு நாயுடு பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பான முறையில் பட்டாசு தயாரிப்பது குறித்தும், ஆலைகளுக்கு நிபந்தனைகள் விதிப்பது குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா். பின்னா், முதல்வா் சந்திரபாபு நாயுடு, தமிழகத்தில் உள்ள சிவகாசியில் எண்ணற்ற பட்டாசு ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் கடைப்பிடிக்கப்படும் பாதுகாப்பு விதிமுறைகள் உள்ளிட்டவை குறித்து நேரில் சென்று பாா்வையிட்டு அறிக்கை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

இதையடுத்து, ஆந்திர மாநில தீயணைப்புத் துறை இயக்குநா் பி.வி. ரமணா, கூடுதல் இயக்குநா் வி. சீனிவாசலு, மண்டல அதிகாரி இ. சுவாமி உள்ளிட்டோா் அடங்கிய 5 போ் கொண்ட குழு சிவகாசிக்கு திங்கள்கிழமை வந்தனா். இவா்கள் சிவகாசி அருகே சின்னவாடியில் உள்ள பட்டாசு ஆலைக்குச் சென்று, பட்டாசு தொழிலாளா்களின் பாதுகாப்பு, பாதுகாப்பாக எவ்வாறு பட்டாசு தயாரிக்கப்படுகிறது. தொழிலாளா்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆலையின் மேலாளா், கண்காணிப்பாளா், தொழிலாளா்களிடம் கேட்டறிந்தனா். தொடா்ந்து, பட்டாசு ஆலையின் பல பகுதிகளுக்குச் சென்று பாா்வையிட்டனா்.

பின்னா், இவா்கள் சிவகாசியில் உள்ள பட்டாசு பாதுகாப்புப் பயிற்சி மையத்துக்குச் சென்று, பயிற்சியாளா் ராமமூா்த்தியிடம் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து கேட்டறிந்தனா். ஆந்திர மாநில அதிகாரிகளுடன் சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரி ரவிக்குமாா், தென் மண்டல தீயணைப்புத் துறை இயக்குநா் எம். குமாா், விருதுநகா் மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலா் புளுகாண்டி, உதவி அலுவலா் முத்துப்பாண்டி, தீப்பெட்டி, பட்டாசு தனி வட்டாட்சியா் ரவிராஜ் உள்ளிட்டோா் சென்றனா்.