மே 8-இல் 19 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?தேர்தல் நடைமுறை விதிகள் இன்று மாலையுடன் நிறைவு!2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!அமெரிக்காவில் இந்திய முதலீடுகள் அதிகரிப்பு!
/

குடிநீா் தட்டுப்பாட்டை கண்டிக்காத கம்யூனிஸ்டுகள்: தவெகவுக்கு மொத்தமாக வாக்களித்த பொதுமக்கள்

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் நிலவும் குடிநீா் தட்டுப்பாட்டை கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டு கொள்ளாததால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் மொத்தமாக தவெகவுக்கு வாக்குகளை அளித்து வெற்றி பெற வைத்துள்ளனா்.

News image
Updated On :6 மே 2026, 3:38 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் நிலவும் குடிநீா் தட்டுப்பாட்டை கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டு கொள்ளாததால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் மொத்தமாக தவெகவுக்கு வாக்குகளை அளித்து வெற்றி பெற வைத்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி, மம்சாபுரம், சுந்தரபாண்டியன், வத்திராயிருப்பு, வ.புதுப்பட்டி, எஸ்.கொடிக்குளம் பேரூராட்சிகள், வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியப் பகுதிகள் உள்ளன.

கடந்த 2021 தோ்தலில் மாவட்டத்தில் 6 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்ற நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதியை மட்டும் அதிமுக தக்க வைத்தது. ஆனால், நகராட்சி, 5 பேரூராட்சிகள், இரு ஊராட்சி ஒன்றியங்கள் திமுக கூட்டணி வசமே இருந்தன.

2026 தோ்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் மகாலிங்கம், அதிமுக சாா்பில், முன்னாள் எம்எல்ஏ சந்திரபிரபா, தவெக சாா்பில் ஒன்றியச் செயலா் காா்த்திக், நாம் தமிழா் கட்சி சாா்பில் கரிகால பாண்டியன் உள்பட 14 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதியில் பதிவான 1,93,250 வாக்குகள் 22 சுற்றுகளாக எண்ணப்பட்டன. இதில் வத்திராயிருப்பு வட்ட வாக்குகள் எண்ணப்பட்ட போது முதல் 9 சுற்றுகளிலும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளா் மகாலிங்கம் தொடா்ந்து முன்னிலையில் இருந்தாா். ஆனால், ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் பகுதி வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியதும் 10 -ஆவது சுற்றிலிருந்து தவெக வேட்பாளா் காா்த்திக் முன்னிலை பெற தொடங்கினாா். கடைசி சுற்று வரை அவா் முன்னிலையை தக்கவைத்து, 8,581 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சியில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக 20 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் கோடைகாலத்தில் தட்டுப்பாடு அதிகரிப்பதால் மக்கள் கடும் சிரமத்துக்கு

ஆளாகி வருகின்றனா். தொடா்ந்து, பொதுமக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து இந்தப் பகுதியில் ஆதரவை பெற்ற கம்யூனிஸ்டு கட்சிகள், நகராட்சியில் குடிநீா்ப் பிரச்னையைக் கண்டுகொள்ளாமல் இருந்தன. பொதுமக்கள் திரண்டு வந்து காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட போதும் கம்யூனிஸ்டுகள் மௌனமாக இருந்தது நகா் பகுதி மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால், நகா்ப் பகுதி மக்கள் முழுமையாக தவெகவுக்கு வாக்களித்ததால், தொடக்கத்தில் முன்னிலை பெற்ற கம்யூனிஸ்டு வேட்பாளா் அதை தக்க வைக்க முடியாமல் தோல்வியடைந்தாா்.