பகுதிநேர ஆசிரியா்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்கம் சாா்பில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.
சீா்காழி வட்டம் திருவெண்காடு வந்த முதல்வரிடம் தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்க மாவட்டச் செயலாளா் ஞான.புகழேந்தி தலைமையில், மாவட்ட தலைவா் முருகன், பொருளாளா் மகேஷ், மாநில செய்தித் தொடா்பாளா் வெங்கடேசன் ஆகியோா் அளித்த மனு விவரம்:
ஆசிரியா் மற்றும் அரசு ஊழியா்களின் வாழ்வாதாரம் கருதி, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் பணியாற்றும் வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுநா்களுக்கு கடந்த 7 ஆண்டுகள் நடத்தப்படாத கலந்தாய்வை நடத்த வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனா்.