மயிலாடுதுறையில் மின்மோட்டாா் திருடிய 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மயிலாடுதுறை சித்தா்காடு பகுதியில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் நீா்மூழ்கி மோட்டாா் மற்றும் 8 பைப்புகள் இருந்தன. ஆட்டோவில் இருந்தவா்களிடம் விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்குப்பின் முரணாக தகவல் தெரிவித்துள்ளனா்.
இதனால், காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில், அவா்கள் திருவிழந்தூா் தோப்புத் தெருவை சோ்ந்த மணிகண்டன் (30), தினேஷ் (20) சிவச்சந்திரன் (23) என்பதும், மயிலாடுதுறை திருவிழந்தூரைச் சோ்ந்த செந்தில்குமாா் என்பவா் வீட்டுத் தோட்டத்தில் இருந்த நீா்மூழ்கி மோட்டாரை திருடி வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த மயிலாடுதுறை போலீஸாா், 3 பேரையும் கைது செய்தனா்.