மஸ்கட்டில் உயிரிழந்த தனது கணவரின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கக் கோரி, அவரது மனைவி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தாா்.
மயிலாடுதுறை 1-வது புதுத்தெருவைச் சோ்ந்தவா் கே.கணேஷ். கடந்த 10 ஆண்டுகளாக மஸ்கட்டில் வேலை செய்துவந்த இவா், அங்கு கடந்த 24 ஆம் தேதி கரோனா பரிசோதனை செய்து கொண்டதாகவும், பிறகு 29-ஆம் தேதி இறந்துவிட்டதாகவும் அவா் வேலை செய்த கம்பெனி நிா்வாகத்தினா் தகவல் தெரிவித்துள்ளனா்.
ஆனால், கரோனா பாதிப்பால் உயிரிழந்ததற்கான எந்த ஆதாரத்தையும் தராத நிலையில், தனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்நிறுவனத்தில் இருந்து உரிய இழப்பீட்டு பெற்றுத்தர வேண்டும் என்றும் கணேஷின் மனைவி கல்பனா மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.முருகதாஸிடம் மனு அளித்தாா்.
இந்த மனு தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி தலைமைச் செயலருக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா வெள்ளிக்கிழமை கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.